Tuesday, November 28, 2006

ஆசிவகம் 3



ஆசிவகம் 3


தொல்பொருள் துறையினரின் அலட்சியப் போக்குக் குறித்து ஆசிவகம் 2 ல் குறித்திருந்தேன். மேலும், சமண மத ஆதாரங்கள் இந்து மத ஆதாரமாக மாறலாம் என்றும் எழுதியிருந்தேன். சில அன்பர்கள் ஆதாரம் இல்லாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆதாரம்தான் என்ன? ஒரு பேராசிரியர், க.நெடுஞ்செழியன்என்பார், சமணத் துறவியான இளங்கோவடிகள் செய்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் "ஆசிவகம்" சார்ந்தது என்று எழுதியிருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஆசிவகம் தான் பின்னாளில் "வைணவம்" ஆனது என்று சொல்கிறார். சரி. தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

சமீபத்தில் என் நண்பர் திருப்பதிசாமி தொலைபேசியில் அழைத்து சிலப்பதிகாரம், சிற்றண்ணவாயில் ஆகியவை ஆசிவகம் சார்ந்தது என்று பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல் நேரிலே வந்து பேரா.க.நெடுஞ்செழியனின் அந்த இரண்டு புத்தகங்களையும் பரிசாக கொடுத்தார். படித்துவிட்டு இதற்கு தக்க மறுப்பு எழுதுமாறும் கேட்டுக் கொண்டார். :-)

அந்த புத்தகங்கள் இதுதான்:

1. சங்கக்காலத் தமிழர் சமயம்.
2. சித்தண்ண வாயல்

கிடைக்கும் இடம்:

பாலம்இ/7,
பாரத் அடுக்ககம்,
ஆர்.வி. நகர்,அண்ணா நகர் கிழக்கு,
சென்னை - 102

பேராசிரியர் நிறைய சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு என்ன பயன்?. சான்றுகள் இல்லாமல் அவர் தன் கற்பனை குதிரையை (எருது? ;-) புத்தகம் முழுக்கஅலையவிட்டுருக்கிறார். சான்றுகளாக அவர் கூறும் இடங்கள் எல்லாம் சமண (ஜைன)நூல்களிலிருந்து தான் சான்றாக தருகிறார். யான் ஈங்கு எடுத்துக்காட்டுதும்!

"திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்"

என்பது சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் முதல் பாடலாக வரும் பாட்டு. இந்தப் பாட்டில்கூறப்பட்டிருக்கும் தெய்வம்தான் என்னை? இதற்கு எந்த உரையாசிரியரிடமும் போக வேண்டாம். இந்தப் பாட்டு "அருக பகவானை"ப் போற்றுகிறது. இதில் ஐயத்திற்கு கிச்சித்தும் இடனில்லை. இந்தப்பாட்டு அருகனைத்தான் குறிக்கிறது என்பதற்கு, இந்தப் பாட்டில் Key word"ஆக இருக்கும் "திரு முக்குடை", " பிண்டி", "அறிவனை", "கந்தன் பள்ளி" என்ற சொற்களுக்கு விளக்கம் பெற புகுந்தாலே உண்மைப் புலப்படும். ஆனால் ஏனோ நம்ம பேராசிரியர் மற்ற சொற்களை விட்டுவிட்டு "அறிவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி, சுற்றி வந்து பொருள் கூற சிரமப்பட்டிருக்கிறார். "அறிவன்" என்ற சொல் "மற்கலி கோசரை" குறிக்கும் என்கிறார் நம் பேரா. க.நெ. ஆனால் அதற்கு அவர் எந்த சான்றுகளையும் கூறவில்லை.

மாறாக, மேலே சொன்ன முக்கிய வார்த்தைகள் சமண இலக்கியங்களில் விரவி வருவதைக் காணலாம். மேலும், அறிவன் என்ற சொல் அருகர், புத்தரரைக் குறிக்கும் தனிச் சொல். பின்னாளில் எல்லா மதங்களும் அச்சொல்லை உள்வாங்கிக் கொண்டன. தமிழில் உள்ள எல்லா நிகண்டுகளும் "அறிவன்" என்ற சொல்லை அருகற்கும், புத்தருக்கும் வழங்கி வருவதைக் காணலாம். உண்மை இவ்வாறு இருக்க நம்ம பேராசிரியரோ அச்சொல் 'மற்கலி கோசரை" குறிக்கிறது என்கிறார். எங்கே போய் ... கொள்ள? இது முழுப் பூசணிக்காயைசோற்றில் மறைப்பது போலாகும். :-)

அதுபோல் இன்னொன்றையும் ஈண்டு சொல்லலாம். "திருமூக்குடை" - மூன்று குடைகள். அருக பெருமானுக்கே உரித்தான ஒன்று. அருகருக்கு சிறப்பாக கூறப்படும் அதிசயங்களில் ஒன்று! அருகன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாகையால் குறியீடாகக் குறிக்க மூக்குடைகள் அமைப்பது ஜைன சம்பிரதாயம். சிற்ப சாத்திரத்தில் அருகனுக்கே இக்குறியீடு உண்டு. வேறு எந்த கடவுளுக்கும் இந்த குறியீடு கிடையாது. அப்படியிருக்குமானால் அவற்றை சுட்டினால்அமைய பெறுவேன். மற்கலி கோசருக்கு அவ்வாறு குறியீடு இருந்தால் பேரா.க. நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் சுட்டவேண்டுகிறேன்! "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" ;-)

சரி, சமண தமிழ் இலக்கியங்களில் பிண்டி, முக்குடைப் பற்றியப் பாடல்கள் பரவலாக வழங்கி வருவதையும் பார்க்கலாம்.

1." மின்னார் முத்து மணிமாலை
மிளிருங் குடைமூன் றுடையானை .... "
- தோத்திரத் திரட்டு

2. "பெருநாள் மதிபோல் நிலவுமுக் குடையாய்
பிழைபடா நெறியாய் பிறவிவேர் குறுவாய்
முருகுலா மலர்மேல் வருதிக பரனே!"
- மந்திரப் பத்து

3. " முத்தொளி முக்குடையாய் மூவுலகு ஆளுடையாய்
உத்தமனே அருகா உன்பதமே சரணம் ..... !"
- சரணப் பத்து

4. " திகழ்பூப் பிண்டி நிழலுடையாய்
திக்கே யுடையாய் முக்குடையாய் ..........!"
- அருகர் பத்து

5. " பேதையர் காதம் பிணைக்கறுக்கும் பூம்பிண்டி
நாதனை முக்குடைக்கீழ் நாயகனைக்-காதிவினை .........!"
- திரு இரட்டை மணி மாலை

6. " உலர்தழைப்ப ஒளிதிகழ்மூ வாமதிமுக் குடையானை அடலார் ஆழ் வலர்தழைக் கும்வண் மயிலை மன்னவனை, மணியை, முன்னாது ......!"
- திருமயிலாப்பூர்ப் பதிகம்

7. " கொலையிலா நெறிவேந் தனே ஒளி
குலவு முக்குடை யாளனே!
நிலையனே திருமயிலை மேவிய
நேமி நாத சுவாமியே!"
- திருமயிலை நேமிநாதசுவாமி பதிகம்

8. " முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டெருத்தின்
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காதார் அன்றே!"
- சீவக சிந்தாமணி (2740)


சிற்பச் சான்று இங்கே பார்க்கவும்.

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=16

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=14

தொடரும்...

4 comments:

Thangamani said...

ஆசிவகம் பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமணம் குறித்த உங்கள் வலப்பதிவும், கட்டுரைகளும் மிகவும் அவசியமானவை மட்டுமல்ல சமணம் பற்றிய அறிவு மிகவும் அருகிப்போன காலச்சூழலில் அச்செய்திகளை பதிவதும், ஆராய்ச்சிக்கு தூண்டும் நூற்களை, சுட்டிகளை கொடுப்பதும் முஇகவும் சிறப்பான பணி. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

Banukumar said...

தங்கமணி ஐயா,

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி!

தொடர்ந்துப் படித்து வாருங்கள் ஐயா.


இரா.பானுகுமார்,
சென்னை.

கோவி.கண்ணன் [GK] said...

//தொல்பொருள் துறையினரின் அலட்சியப் போக்குக் குறித்து ஆசிவகம் 2 ல் குறித்திருந்தேன். மேலும், சமண மத ஆதாரங்கள் இந்து மத ஆதாரமாக மாறலாம் என்றும் எழுதியிருந்தேன். சில அன்பர்கள் ஆதாரம் இல்லாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆதாரம்தான் என்ன? ஒரு பேராசிரியர், க.நெடுஞ்செழியன்என்பார், சமணத் துறவியான இளங்கோவடிகள் செய்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் "ஆசிவகம்" சார்ந்தது என்று எழுதியிருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஆசிவகம் தான் பின்னாளில் "வைணவம்" ஆனது என்று சொல்கிறார். சரி. தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.//

நல்ல தகவல்கள் ஐயா,

இதுபோன்ற புரட்டுக்கள் சென்ற நூற்றாண்டுமுதல் வெளிச்சத்துக்கு வருகிறது. கண்டுபிடித்துச் சொல்பவர்களை "இந்து துரோகி என்று சொல்வார்களோ ?"
:)

ராஜ்குமார் ரவி said...

ஆசிவகம் பற்றிய விரிவான நூல் சங்க காலத் தமிழ் சமயமென கேள்விப் பட்டிருக்கிறேன். சிலம்பை ஆசிவகம் என குறித்திருப்பது அறிந்து இந்த நூலில் மேலிருந்த ஈர்ப்பு போய்விட்டது.